India

‘மொபைல் ஹெட்போன்’ அதிக விலை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கொலை: டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

‘மொபைல் ஹெட்போன்’ அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியரை இரண்டு விற்பனையாளர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஒவைஷ். இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல பணி முடித்து திங்கள் கிழமை இரவு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது லல்லன் மற்றும் அயூப் ஆகிய இரு விற்பனையாளர்களுடன் ‘மொபைல் ஹெட் போன்’ அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரண்டு விற்பனையாளர்களும் முகமது ஓவைஷைத் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் ரோட்டில் மயங்கி கீழே விழுந்தார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் போலிஸாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ஆசிரியரை மீட்டு அருணா அசாஃப் அலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பின்னர் முகமது ஓவைஷைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் ஒருமணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலிசார் அவரின் வீட்டிற்கு தகவல் கொடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலத்தைக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

முகமது ஓவைஷ் குடும்பத்தினர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கொலை பதிவு செய்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.