India

காஷ்மீர் செல்ல அனுமதி : பா.ஜ.க அரசின் எதிர்ப்பை நீதிமன்றம் சென்று முறியடித்த யெச்சூரி!

60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ஆக.,5ம் தேதி ரத்து செய்வதாக மோடி அரசு அறிவித்தது.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் தொலை தொடர்பு சேவை, இணைய சேவை, தொலைக்காட்சி இணைப்பு சேவை உள்ளிட்டவற்றை ரத்து செய்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பாஜக அரசின் உத்தரவின் பேரில் ராணுவத்தின் பிடியில் இருந்தது.

இதனால் நாட்டின் பிற மாநிலத் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என எவரையும் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான யூசுப் தரிகாமியை சந்திப்பதற்காக ஸ்ரீநகர் சென்ற சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து, தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரை சந்திக்க அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் சீதாராம் யெச்சூரி.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜம்மு காஷ்மீருக்கு சீதாராம் யெச்சூரி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், காஷ்மீரில் எவ்வித அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. பாஜக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து நீதிமன்றம் சென்று வெற்றி பெற்ற சீதாராம் யெச்சூரிக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.