India

ரயிலில் டிக்கெட் இல்லாமல் சிக்கிய 89 லட்சம் பேர் : கடந்த 3 ஆண்டுகளில் கட்டிய அபராதம் எவ்வுளவு தெரியுமா ?

இந்தியாவில் கடந்த கால பா.ஜ.க ஆட்சியின் போது ரயில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள், நடுத்தரக் குடும்பத்தினர் சிறு வியாபாரிகள் என கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தனர். மேலும் இதனால் பலர் ரயில் பயணத்தை தவிர்க்கத் தொடங்கினர்.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு ரயில்வே அறிக்கையை ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் 2016 – 2017ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவர்களிடம் இருந்து பெறும் அபராதம் போதுமானதாக இல்லை. ஆய்வுகளும் முறையாக நடைபெறவில்லை. எனவே இதுபோன்ற நடவடிக்கை தொடரக்கூடாது எனவும் நாடாளுமன்ற கூட்டுக்குழு எச்சரித்தது.

இதனையடுத்து ரயில்வே துறை அனைத்து துறை மண்டல அதிகாரிகளுக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் பரிசோதகர்களுக்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.

முன்னதாக இதுகுறித்து, மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கடந்த மூன்று ஆண்டுகளில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து வசூலான அபராத தொகை எவ்வளவு உள்ளிட்ட கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் எழுப்பி இருந்தார்.

அந்த ஆர்.டி.ஐ மனுவிற்கு இந்திய ரயில்வே துறை பதில் அளித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2016 – 2017ம் ஆண்டு டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.405.30 கோடி ரூபாய் அபராதமும், 2017 – 2018ம் ஆண்டு ரூ.441.62 கோடி அபராதமும், 2018-2019-ம் ஆண்டில் ரூ.530.06 கோடி அபராதம் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 89 லட்சம் பேர் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்துள்ளனர். அவர்களிடம் குறைந்தபட்சம் ரூ.250 வசூலிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.