India

விமானத்தில் ‘ஆப்பிள் லேப்-டாப்’ எடுத்துச் செல்ல தடை : சிவில் விமான போக்குவரத்துத் துறை உத்தரவு!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் மேக்புக் ப்ரோ மாடல் லேப்-டாப்புகளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த குறைபாட்டை ஆப்பிள் நிறுவனமே ஒப்புக்கொண்டு அந்நிறுவனத்தில் இணையதளத்தில் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், “ஆப்பிள் 15 இன்ச் மேக்புக் ப்ரோ வகை மடிகணினிகளில் உள்ள பேட்டரிகள் அதிகமாக வெப்பமாகின்றன. அதனால் தீப்பிடிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த வகை லேப்டாப்புகளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது. இதனை உபயோகிக்கும் போது கவனம் தேவை” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “சமீபத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், 2015ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2017ம் ஆண்டு பிப்பரவரி வரையிலான காலட்டத்தில் விற்பனையாகியுள்ள லேப்-டாப்புகளில் மட்டும் இத்தகைய பிரச்சனை வரும். அதனால் அந்த ஆண்டுகளில் லேப்-டாப் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு கட்டணமின்றி வேறு பேட்டரிகளை வழங்குவோம்” என அதில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் எதிரொலியாக, 15 இன்ச் மேக்புக் ப்ரோ வகை மடிகணினிகளை விமானத்தில் கொண்டு வருவதற்கு சிவில் விமான போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை விமான போக்குவரத்துத் துறைத் தலைவர் அருண்குமார் அறிவித்துள்ளார்.