India

ப.சிதம்பரத்துக்கு மேலும் 5 நாட்கள் சிபிஐ காவல் நீட்டிப்பு : சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான ப.சிதம்பரத்தை சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் கடந்த வாரம் 21ம் தேதி டெல்லியில் கைது செய்தது.

இதனையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 22ம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி வழங்கப்பட்டது.

விசாரணையின் போது ப.சிதம்பரம் எதற்கும் பதிலளிக்காமல் இருந்ததாக சிபிஐ தரப்பு தெரிவித்தது. இந்நிலையில், 5 நாள் காவல் முடிவடைந்த நிலையில் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது மேலும் விசாரணை நடத்தவேண்டி இருப்பதால் ப.சிதம்பரத்துக்கான சிபிஐ காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பு வாதிட்டது.

அதற்கு, கடந்த 5 நாட்களில் என்ன விசாரணை நடத்தப்பட்டது எனவும் வழக்குத் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை என்ன என்பதையும் விளக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் கூறியது.

இதனையடுத்து ப.சிதம்பரம் சார்பில் வாதாடிய கபில் சிபல், எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுவது முறையல்ல என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் சிபிஐயின் கோரிக்கை மீது சிறிது நேரம் கழித்து தீர்ப்பளிப்பதாக சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கூறியது. பின்னர் கூடிய நீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு ஆகஸ்ட் 30ம் தேதி வரை சிபிஐ காவலை நீட்டிக்க அனுமதி வழங்கியது.

முன்னதாக, ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அதன் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டதில் ஏற்கெனவே சிபிஐ ப.சிதம்பரத்தை கைது செய்துவிட்டதால் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.