India

ஒரே சமயத்தில் 3 அரசுப் பணிகள்... 30 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி சம்பளம் பெற்றுவந்த ஊழியர் கைது!

நாடு முழுவதும் பட்டதாரிகள் ஒவ்வொருவரும் அரும்பாடுபட்டு போட்டித் தேர்வுகளைச் சந்தித்து வெற்றி பெற்றும் ஒரு சில காரணங்களால் பலருக்கு அரசுப் பணி கிடைக்காமல் போகிறது.

ஆனால் பீகாரைச் சேர்ந்தை சுரேஷ் ராம் என்ற நபர் கடந்த 30 ஆண்டுகளாக 3 வெவ்வேறு அரசு பணிகளில் வேலை செய்து, அனைத்திலும் சம்பளம் பெற்று வந்தது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ராம் அண்மையில் கொண்டு வரப்பட்ட நிதிமேலாண்மை மூலம் அம்பலப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து உரிய ஆதாரங்களோடு தங்களை வந்து சந்திக்குமாறு உத்தரவிட்டதை அடுத்து, வெறும் ஆதார் மற்றும் பான் கார்டுடன் சென்ற சுரேஷ் ராமிடம் பணி குறித்த ஆவணங்களை கொண்டுவரச் சொல்லியுள்ளனர்.

தன்னைப்பற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்ததாலேயே இது போன்ற ஆதாரங்களை கேட்பதாகக் கணித்த சுரேஷ் ராம், தலைமறைவானார்.

அதன் பின்னர் தலைமறைவாக இருந்த சுரேஷ் ராமை கைது செய்ததை அடுத்து, அவர் பொதுத்துறையில் உதவிப் பொறியாளர், நீர் மேலாண்மைத் துறை அதிகாரியாக பங்கா மற்றும் பீம் நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பணிபுரிந்து சம்பளம் பெற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல பதவி உயர்வுகளைப் பெற்றுள்ள சுரேஷ் ராமிடம் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தினால்தான் அவருக்கு எவ்வாறு அரசுப் பணி கிடைத்தது தொடர்பான விவரங்கள் வெளியாகும் என போலிஸ் தரப்பு கூறியுள்ளது.