India

பொருளாதார வளர்ச்சி குறித்த கவலையில் ரகுராம் ராஜன் : அதெல்லாம் சரியாகி விடும் என்று சொன்ன சக்திகாந்த தாஸ்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்கிறது என பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் கூறிவந்தாலும் வளர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகச் சமீபத்தில் வந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார தேக்க நிலை மிகவும் கவலை அளிப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரகுராம் ராஜன், ''இந்தியாவின் பொருளாதார மந்த நிலை கவலை அளிக்கிறது. 2018-19ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 6.8 சதவீதமாக இருக்கிறது. 2014-15க்குப் நிதியாண்டிற்கு பின் மிகவும் மோசமான சரிவை இந்தியா சந்தித்துள்ளது.

பல்வேறு தொழில்களின் வளர்ச்சியில் நிலவி வரும் மந்த நிலையை போக்க சீர்திருத்தங்கள் அவசியம். அவற்றின் மூலம், தனியார் முதலீட்டை அதிகரிக்க முடியும். வங்கித்துறை சேராத நிதி நிறுவங்களில் பணப்புழக்கம் கடுமையாக குறைந்துள்ளது. எனவே வாங்கி சாரதா நிதி நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியது போல இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்தி காட்டபடுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பல தனியார் நிறுவனங்கள் கணித்துள்ளன அவை மத்திய அரசு வெளியிட்ட கணிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி குறித்த விவரங்கள் தவறான கொள்கை முடிவு எடுக்க காரணமாக அமைந்துவிடக்கூடாது'' என தெரிவித்தார்.

இதற்கிடையே இந்தியாவின் பொருளாதார தேக்க நிலை குறித்து தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசுகையில், “எதிர்மறையான, சோர்வான எண்ணங்கள் எப்போதும் நல்லது செய்யாது. அதனால், பொருளாதாரம் வளரும் என்று நல்ல எண்ணத்துடன் அனைவரும் இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இந்நிலையில், இதை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.