India

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் அடுத்த இலக்கு : மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

ஜம்மு காஷ்மீருக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்த இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது மத்திய அரசு.

இந்த திடீர் அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இந்தியாவுடனான பல்வேறு வர்த்தக உறவுகளை முறித்துள்ளது. மேலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வரை சென்று முறையிட்டுள்ளது.

இதற்கிடையில், காஷ்மீரில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடாதபடி அங்கு ஆக.,4ம் தேதியில் இருந்தே 144 தடை உத்தரவு பிறப்பித்தும், அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தும் வைத்துள்ளது பா.ஜ.க. அரசு.

இந்நிலையில், ஜம்முவின் உதம்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ”காஷ்மீர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்கது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களையே கைது செய்தும், வீட்டுச் சிறையில் வைத்துள்ளோம்.” என பேசினார்.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பதையே அடுத்த இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும் என பேசிய அவர், ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நாம் தடையில்லாமல் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.