India

ATM கோளாறுகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டண வசூல்? - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பணம் எடுக்க முடியாமல் போனால், ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏ.டி.எம்-களில் மாதத்திற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏ.டிஎம்-களில் 3 முறைக்கு மேலும் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், தொழில்நுட்பக் கோளாறு போன்ற காரணங்களால் பணம் எடுக்க முடியாமல் போனால், அதற்கும் சேர்த்து சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஏராளமான புகார்கள் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, மென்பொருள் மற்றும் வன்பொருள் பிரச்னையால் பணம் எடுக்க முடியாதபோது, அதனை வங்கி பரிவர்த்தனையாக கருதக்கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

அதேபோல், பணம் இருப்பு விவரத்தை சரிபார்த்தல், காசோலை புத்தகத்தை பிரிண்ட் செய்வது, பணம் அனுப்புதல் போன்ற இதர பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.