India

காஷ்மீர் இஸ்லாமிய பத்திரிகையாளர் கைது செய்து விடுதலை: கைதுக்கான காரணத்தை சொல்லமறுத்த காவலர்கள்!

‘கிரேட்டர் காஷ்மீர்’ ஆங்கில நாளேட்டில் பணிபுரியும் இர்ஃபான் மாலிக் என்பவர் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இரவு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். பிறகு பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரின் டிரால் நகரத்தில் வசித்துவரும் இர்ஃபான் மாலிக், காஷ்மீரின் கொந்தளிப்பு மிகுந்த பகுதியான புல்வாமா மாவட்டச் செய்திகளை ‘கிரேட்டர் காஷ்மீர்’ நாளேட்டுக்கு அளித்து வருகிறார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இந்தச் சூழலில் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டது இதுதான் முதல்முறை எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இரவு 11.30 மணியளவில் இர்ஃபான் மாலிக்கின் வீட்டுக்கு கருப்பு நிற பந்தானா அணிந்து வந்த படை வீரர்கள் மாலிக்கை கைது செய்ததாக அவரது தாய் ஹசீனா தெரிவித்துள்ளார்.

Irfan Malik

பின்னர், மறுநாள் (ஆகஸ்ட் 15) காலையில் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்துக்குச் சென்று அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இர்ஃபான் மாலிக் விசாரிக்கப்பட்டு பிறகு பிணைப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விடுதலை செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.