India

உஸ்பெகிஸ்தான் பெண்ணை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை : டெல்லியில் மீண்டும் ஒரு பயங்கரம் !

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், இரண்டு மாதத்துக்கு முன்னர் டெல்லி வந்து, தனது நாட்டைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுடன் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

அவருக்கு குர்கானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நண்பர்களாகப் பழகிவந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி, உஸ்பெகிஸ்தான் பெண்ணுக்கு போன் செய்த அந்த இளைஞர், தெற்கு டெல்லியில் அமைந்துள்ள மால் ஒன்றுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதைக் கேட்டு அங்கு சென்ற அந்தப் பெண்ணை ஒரு காரில் ஏறும்படி கூறியுள்ளார்.

ஆனால், அந்தக் காருக்குள் ஏற்கனவே இரண்டு பேர் இருந்துள்ளனர். அந்த காரை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குக் கொண்டு சென்று நிறுத்திவிட்டு, காரில் இருந்த மூவரும் அந்தப் பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரைக் கடுமையாகத் தாக்கி, அவரது ஃப்ளாட் அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

காயங்களோடு தனது அறைக்கு வந்த அந்தப் பெண், நடந்த சம்பவத்தை தனது தோழியிடம் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அப்பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ள போலீசார், பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

தேடப்படும் முக்கிய குற்றவாளியின் பெற்றோர், தங்கள் மகன் மீது புகாரளிக்க வேண்டாம் என்று உஸ்பெகிஸ்தான் பெண்ணுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.