India

ஆந்திராவில் மனைவியின் தலையை வெட்டி ரோட்டில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற கணவன் - அலறி அடித்து ஓடிய மக்கள்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நாராயணபுரம் ஸ்ரீநகரைச் சேர்ந்த மணிகிராந்திக்கும், பிரதீப் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் விவகாரத்து கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார் பிரதீப்.

இது தொடர்பாக மணி கிராந்திக்கும், பிரதீப்பிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆக.,10ம் தேதி அன்று மதியம், கடைக்கு சென்று வீடு திரும்பிய மணி கிராந்தியிடம் பேச வேண்டும் என பிரதீப் கூறியிருக்கிறார்.

ஆனால், வீட்டினுள் நுழையவிடாமல் தடுத்த மணி கிராந்தி, வாசலிலேயே நிற்கவைத்து பேசியிருக்கிறார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக பிரதீப் தாக்கியதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மணி கிராந்தி.

இதனையடுத்து, மணி கிராந்தியின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு பிரதீப் தெருவில் சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பலர் பீதியில் அலறியடித்தும் ஓடினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி.,யில் பதிவாகியிருக்கிறது.

பின்னர், துண்டிக்கப்பட்ட மணிகிராந்தியின் தலையை கால்வாயில் வீசிவிட்டு போலீசில் சரணடைந்திருக்கிறார் பிரதீப். இதனையடுத்து மணிகிராந்தியின் உடலையும், தலையையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.