India

முதல்வராக இருந்தாலும் புல்லட் ஃப்ரூப் வசதி இல்லாத சாதாரண கார்களை பயன்படுத்தும் மம்தா - காரணம் என்ன ?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஸ்கார்ப்பியோ காரில் வந்திருந்தார். இது அங்கிருந்த பலரின் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இன்றைய அரசியல்வாதிகள் பலரும் அதிசொகுசு கார்களில் பயணிக்கும் நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும், புல்லட் ப்ரூஃப் பாதுகாப்பில்லாத சாதாரண காரிலேயே அவர் பயணம் செய்து வருவதை மக்கள் வியந்து பார்க்கிறார்கள்.

இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் விருப்பத்திற்குரிய வாகனம் ஹூண்டாய் சாண்ட்ரோவும், ஸ்கார்பியோவும் தான். பல ஆண்டுகளாக தனது WB 02U 4397 பதிவு எண் கொண்ட சாண்ட்ரோ காரைத்தான் மேற்கு வங்கத்தில் இருக்கும்போது பயன்படுத்தினார் மம்தா. இப்போது பாதுகாப்புத்துறையின் அறிவுறுத்தலின்படி ஸ்கார்பியோ காருக்கு மாறி உள்ளார்.

மம்தாவுக்கு எப்போதும் , காரின் முன்புற இருக்கையிலேயே அமர்வது பிடிக்கும். ஒரு மருத்துவ உபகரண பெட்டியும், சாக்லேட்களும் அவரது பயணத்துணை. தேர்தல் பிரசாரங்களுக்குச் செல்லும்போது, மேற்புறம் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்கார்ப்பியோ வகை காரை பயன்படுத்துவது மம்தாவின் வழக்கம். ரயில்வே அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், டெல்லியில் பயணிக்க மம்தா உபயோகப்படுத்திய வாகனம் மாருதி ஜென்.

முதல்முறை முதல்வராகப் பதவியேற்ற பிறகு, தனது வாகங்களுக்குப் பின்னால் அதிக வாகனங்கள் பின்தொடர்ந்ததை விரும்பாத மம்தா அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு காவல்துறை உயரதிகாரியிடம் கூறியிருந்தார். அதன்பின்னர், அவரது வாகனத்திற்குப் பின்செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

“பொதுமக்களின் வரிப் பணத்தை அதிகளவில் எனது பாதுகாப்புக்காகச் செலவிடுவதில் விருப்பமில்லை. எனக்கு புல்லட் ப்ரூஃப் கார் தேவையில்லை.” என உதவியாளரிடம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளாராம்.

அதேபோல் முதல்வர் பயணிக்கும் வாகனம் என்பதற்காக விதிமுறைகளை மீறும்போது அமைதி காக்க வேண்டாம். மற்ற வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது போல தனது வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற மம்தாவின் கண்டிப்பான உத்தரவால் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலிஸார் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றனர்.