India

நாயை வைத்து மனிதர்களுக்கு பாடம் எடுத்தவர் மீது சாதி வெறியை தூண்டியதாக காவல் துறையில் புகார்!

கேரள மாநிலம் கொச்சியில் கடந்த ஜூலை 19 முதல் 21 ம் தேதி வரை தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு (Tamil Brahmins’ Global Meet 2019) என்ற கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதன முறையை நியாயப்படுத்தியும், நாயையும் மனிதர்களையும் இணைத்தும் வெங்கடகிருஷ்ணன் என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். ”நாய்களில், பொம்மரேனியன், லேப்ரேடர் போல பல ஜாதிகள் இருக்கும் போது, மனிதர்களிடம் ஏன் ஜாதி இருக்கக் கூடாது. மனிதர்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற முறை இருக்கிறது என்று கூறினால் ஏன் திட்டுகிறார்கள்” என்று பலே விளக்கம் ஒன்றை கொடுத்தார். அவரது அந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் பெற்றது.

இந்நிலையில், சாதிவெறியோடு கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் பேசிய வெங்கடகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி பெரியாரிய கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் என்பவர் தலைமையில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் நிர்வாகிகள், ” வெங்கடகிருஷ்ணனின் பேச்சு சாதி இன மோதல்களை தூண்டும் வகையில் உள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையில் புகார் அளித்துள்ளோம்” என்றனர்.