India

வாகனப் பதிவுக் கட்டணம் பல மடங்கு உயர்வு : வாடகை ஆட்டோ, கார் ஓட்டுபவர்களை வஞ்சிக்கும் அரசு!

எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும், பயன்பாட்டையும் அதிகரிக்கும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் புதிய வரைவைத் தயாரித்துள்ளது. இதற்காக புதிய வாகனங்கள் பதிவு மற்றும் மறு பதிவிற்கான கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இருசக்கர வாகனங்களுக்கான பதிவுக்கட்டணத்தை 50 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்களுக்கான கட்டணம் 300 ரூபாயிலிருந்து ஐந்தாயிரமாகவும், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு 600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 4 சக்கர வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், கனரக, பயணிகள், சரக்கு வாகனங்களுக்கு 1,500 ரூபாயிலிருந்து 20 ஆயிரமாக பதிவுக்கட்டணத்தை உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல், டீசல் வாகனங்களின் புதுப்பிப்பு கட்டணங்களையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டவரைவையும் அந்த அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவதிப்படும் பொதுமக்கள், ஆர்டிஒ அலுவலகங்களைத் தனியார் மயமாக்கவே, மத்திய அரசு இது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.