India

‘வந்தே மாதரம்’ பாடலை தேசிய கீதமாக அறிவிக்க கோரிய பா.ஜ.க - வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரம் வழங்க வேண்டும். அதற்கான கொள்கை வகுக்கவேண்டும் என பா.ஜ.க-வின் மூத்த தலைவரான அஸ்வினி குமார் உபாத்யாய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடலுக்கு, ரவீந்திரநாத் தாகூர் இயற்றியுள்ள ‘ஜன கண மன’ எனும் தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரம் அளிக்கவேண்டும், இந்த பாடல் சுதந்திர போராட்டத்தின் போது பெரும் பங்கு வகித்ததாகவும் எனவே இந்த பாடலை தேசியப் பாடலாக அங்கிகரித்து தேசிய கீதம் ஆகியவற்றுக்கு சமமான மதிப்பளிக்க வேண்டும்.

மேலும் இந்த பாடல்களையும் ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு கொள்கை வகுக்கவேண்டும் என கோரிக்கை அந்த மனுவில் வைக்கப்பட்டது. அவரின் இந்த மனுவிற்கு சமூக வலைதளத்தில் ஆதரவு எழுந்து வந்தாலும், அதிக அளவிலான எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்நிலையில் இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைகளை கேட்டறிந்த பின்னர், வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக அறிவிக்கக் கோரிய பா.ஜ.க-வின் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பு பா.ஜ.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்றுள்ளனர்.