India

கேரளாவை அச்சுறுத்தி வரும் கனமழை : பல மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’!

கேரளாவில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த கனமழையால் கேரளாவின் பல்வேறு பகுதிகள் உருக்குலைந்தன. கேரள அரசு நிவாரணப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு இயல்புநிலை திரும்பிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மீண்டும் இந்தாண்டு கனமழை பெய்து கேரள மக்களை பயமுறுத்த தொடங்கியுள்ளது. கனமழை காரணமாக காசர்கோடு மாவட்டத்தில் இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 21, 22) ஆகிய இரண்டு நாட்களுக்கு கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 18 முதல் சபரிமலை பகுதியில் மழை வலுத்துள்ளது. பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பத்தினம்திட்டா பகுதியில் கடந்த ஆண்டு பெய்த பெருமழையில் குவிந்த மணல் முழுமையாக அகற்றப்படவில்லை. தற்போதைய கனமழையால் மேலும் மணல் குவிந்து வருகிறது. தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் பம்பையை கடக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கேரள மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. வெள்ளம் ஏற்பட்டால் தங்களையும், உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.