India

அரசியல் சாசனத்தை தெருவுக்கு இழுத்து அசிங்கப்படுத்திய பா.ஜ.க : காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

கர்நாடகத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளால் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கர்நாடக அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் தெரிவித்ததாவது,

“எங்களுடைய முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. கொறடா அதிகாரம் என்னவென்பதில் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சந்தேகம் இருக்கிறது, எனவே காங்கிரஸ் அது சம்பந்தமாக சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி வருகிறது.

விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது ஆளுநர் அதில் தலையிடுகிறார். உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, ஆளுனரிடம் இருந்து கடிதம் வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் ஆளுநர் தலையிட முடியாது. அவர் கருத்தை தெரிவிக்கலாம் தவிர, நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து உத்தரவிட அதிகாரம் கிடையாது. ஆளுநர்கள் தங்களுடைய அதிகார வரம்பை தெரிந்துகொள்ள வேண்டும்.

இது ஜனநாயக விரோதமான செயலாகும். கர்நாடகா ஆளுநரின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. எதிர்க்கட்சிகளில் ஆளுகின்ற மாநிலம் இருக்கக்கூடாது, ஒரு நிலையான அரசாங்கம் இருக்கக்கூடாது என்பதில் பா.ஜ.க குறிக்கோளுடன் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசியல் குழப்பம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது,

“கடந்த 2 நாட்களாக நடந்துவரும் நிகழ்வுகள் இந்தியா ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அச்சம் கொள்ளும் அளவிற்கு நடந்து வருகிறது. தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு பல கேள்விகளை எழுப்புகிறது.

ஆளுநர் முதல்வருக்கு ஒரு நேரத்தைச் சொல்லி பெரும்பான்மையை நிரூபிக்க சொல்வது ஏற்புடையது அல்ல. அது அரசியல் சாசனத்திற்கு ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசியல் கட்சிகளை அழிக்க நினைப்பதை அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.