India

இந்தி & ஆங்கிலத்தில் நடைபெற்ற தபால் துறை தேர்வு ரத்து! - மீண்டும் தமிழர்களிடத்தில் அடிபணிந்த பா.ஜ.க

கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தற்போது அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கிராம அஞ்சல் தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே எழுத முடியும் என மத்திய அரசு அஞ்சல் துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை அடுத்து இந்தத் தேர்விற்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்பை வலியுறுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார். தமிழக அஞ்சல் அலுவலகங்களில் பணி செய்பவர்கள் இந்தி தெரிந்திருக்கவேண்டிய அவசியம் என்ன என்ன தமிழர்கள் கேள்வி எழுப்பினர்.

அஞ்சல் துறை தேர்வுக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த சனிக்கிழமை மனு தாக்கல் செய்தார். இதனை அவசர வழக்காக ஏற்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை (கடந்த 14ம் தேதி) தேர்வினை நடத்தலாம். ஆனால். தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து கடந்த ஞாயிறன்று தேர்வு நடைபெற்று முடிந்தது.

அஞ்சல் துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த பிரச்னை தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தற்போது நடந்து முடிந்த அஞ்சல் துறை தேர்வு ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், இனி அஞ்சல் துறை தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவித்தார்.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் எனப் பரிந்துரைக்கப்பட்டதற்கு தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்தப் பரிந்துரை பரிசீலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.