India

தனக்கு ஆங்கிலம் தெரியாததால் மொத்த அதிகாரிகளையும் இந்தியில் எழுத சொல்லி வதைக்கும் அமைச்சர்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான ரமேஷ் போக்ரியல் நிஷாங்க் தனது அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளும், அலுவலர்களும் கோப்புகளைப் படித்து இந்தியில் குறிப்பு எழுதவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் அத்துறையின் அமைச்சரான ரமேஷ் போக்ரியல் நிஷாங்க். இதற்கு முன்பு கோப்புகளின் குறிப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தி பேசும் வடமாநிலத்தோரில் பலருக்கும் கூட இந்தியில் சரிவர எழுதத் தெரிவதில்லை. ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்த மற்றவர்களும் தற்போது சிக்கலைச் சந்தித்து வருகின்றனர்.

பணிக்குச் சேர்ந்தது முதல் கோப்புகளின் குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதிப் பழகிவிட்டதால் இந்தியில் எழுத வருவதில்லை. எனவே, இந்தியில் எழுதத் தெரிந்த சிலரிடம் உதவி பெற்று குறிப்புகள் எழுதி வருவதாக அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ரமேஷ் போக்ரியல் நிஷாங்க்குக்கு ஆங்கிலம் புரிவதில் சிரமம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு முயற்சியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அமைச்சக அதிகாரிகளை வதைத்து வருவதாகக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.