India

முழுக்க முழுக்க கார்ப்பரேட்களால் நடைபெறும் பா.ஜ.க ஆட்சி : ஆதாரப்பூர்வமாக நிரூபணம்!

2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடையில் மிக அதிகமான தொகை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் தேசியக் கட்சிகளுக்கு ரூபாய் 1,059 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அதில் மிக அதிகபட்சமாக பா.ஜ.க-வுக்கு ரூபாய் 915.59 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்), தேசிய கட்சிகள் இரண்டு ஆண்டுகளில், ரூபாய் 20,000-க்கும் அதிகமாக பெறப்பட்ட நன்கொடையில் 93% கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தும், வர்த்தக நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந்த தொகையில் மிக அதிகபட்சமாக 1,731 நிறுவனங்களிடமிருந்து 915.59 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சி 55 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

2012-2013-ம் நிதியாண்டு முதல் 2017-2018-ம் நிதியாண்டு வரை அதிகபட்சமாக பா.ஜ.க கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 1,621 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கார்ப்பரேட்களுக்காக நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏடிஆர் அறிக்கை மூலம் இந்தக் கருத்து நிரூபணமாகியுள்ளது.

கார்ப்பரேட் நன்கொடை மூலம் நடத்தப்படும் கட்சியான பா.ஜ.க மக்களுக்கு எப்படி நல்லது செய்ய நினைக்கும்? தங்களுக்கு பணம் தரும் கார்ப்பரேட்களின் நலனுக்காக ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோகார்பன் என எந்த எல்லைக்கும் இந்த அரசு செல்லும் என்பதே உண்மை.