India

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது : மத்திய அரசு தகவல் !

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், நாட்டில் உள்ள 855 மாவட்டங்களிலும், 756 நகராட்சி அமைப்புகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளன. நகராட்சி அமைப்புகளை பொறுத்தவரை 184 இடங்கள் வறட்சியின் பிடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மாவட்டங்களை பொறுத்தவரை நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 35 மாவட்டங்கள் வறட்சியில் உள்ளன. கர்நாடகாவில் 18 மாவட்டங்களும், 57 நகராட்சி அமைப்புகளும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளன. டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட நகர்ப்புற பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் நீர் சேமிப்பை ஊக்குவிக்க ஜல்சக்தி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப் பட்டுள்ளது.