India

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த மத்திய அரசு : என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், அடுத்த நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை நிராகரித்தது குறித்த தகவலை உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது மத்திய அரசு.

தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை நிராகரித்தது எப்போது என்கிற விவரத்தை அளிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

விலக்களிக்கக் கோரும் சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட விவரம், நிராகரித்த தேதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை வரும் ஜூலை 16ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு நிராகரித்துள்ள நிலையில், அதன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க என்ன முடிவெடுக்கப்போகிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இரு கட்சிகளும் சேர்ந்து திட்டமிட்டு தமிழக மக்களை வஞ்சிக்கிறதா எனவும் கேள்வி எழுந்துள்ளது.