India

மக்களவைத் தேர்தலில் விட்டதை ஹரியானா சட்டசபை தேர்தலில் பிடிக்கத் திட்டம் வகுக்கும் ராகுல்!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி முடிவெடுத்தார். இந்த முடிவை மாற்றிக்கொள்ளும்படி, செயற்குழு நிர்வாகிகளும், மூத்த தலைவர்களும் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினர்.

தலைவர் பதவிலிருந்து விலகும் முடிவை தற்போதைக்கு தள்ளிப்போட்டுள்ள ராகுல் காந்தி, ஹரியானா சட்டசபைத் தேர்தல் வியூகம் குறித்து அங்குள்ள நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் தோல்வியடைந்ததோடு, அங்கு ஒரு எம்.பி தொகுதியையும் காங்கிரஸால் கைப்பற்ற முடியவில்லை. அதற்கான காரணங்கள் குறித்தும் விசாரித்து அவற்றைக் களையவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளார்.

கட்சி நிலைப்பாடு குறித்து ராகுலுடன் ஆலோசனை நடத்திய ஹரியானா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், ராஜினாமா முடிவைத் திரும்பப்பெற்று தலைவர் பதவியில் தொடரும்படி ராகுலை வலியுறுத்தியுள்ளனர்.

ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனவும், நாடு முழுவதும் பயணம் செய்து மாநில நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து, காங்கிரஸின் மீது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதே இப்போதைய நோக்கம் எனக் கருதுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.