India

உளவுத்துறையின் தோல்வியே புல்வாமா தாக்குதலுக்குக் காரணமா? - உள்துறை அமைச்சகம் பதில்!

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது, வெடிமருந்துடன் தீவிரவாதி ஒருவன் மோதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினான். இதில் 44 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், இன்று மக்களவையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் எம்.பி. சையத் நாசர் உசேன் கேள்வியெழுப்பினார். அதாவது, புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமா? ஆம் எனில் அதற்கான காரணங்கள் என்ன? இல்லையெனில், 300 கிலோ அளவுக்கு வெடி மருந்துகளை கொண்ட வாகனம், நெடுஞ்சாலைக்குள் எவ்வாறு நுழைந்தது? உளவுத்துறையானது இத்தகைய தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்று எச்சரிக்கத் தவறிவிட்டதா என்று கேள்வியெழுப்பினார்.

எம்.பி. சையத் நாசர் உசேன் கேட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் கிருஷ்ணா ரெட்டி தாக்கல் செய்துள்ள அந்த பதிலில் புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமல்ல என்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும், '' ஜம்மு-காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய நிதியுதவியால் பயங்கரவாதம் ஆதரிக்கப்படுகிறது. இருப்பினும், பயங்கரவாதத்தின் மீதான சகிப்புத்தன்மையற்ற கொள்கை மற்றும் பாதுகாப்பு படையினரால் தொடர்ச்சியான நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக ஏராளமான பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புல்வாமா தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் இதுவரை புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பின்னிருந்து சதி செய்தவர்கள் யார்? தற்கொலைப்படையாக செயல்பட்டது யார்? மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு வாகனத்தை கொடுத்து உதவியது யார்? என்ற விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.