India

தமிழகத்தில் அமையவுள்ள ஹைட்ரோகார்பன் கிணறுகள் எத்தனை? : அமைச்சர் பதில்!

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில், தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுமக்கள், விவசாயிகளுடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நேற்று முன்தினம் (ஜூன் 23) 598 கி.மீ. தொலைவுக்கு மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை நடைபெற்றது. இதில், மேற்குறிப்பிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்று ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழகம் உட்பட நாடுமுழுவதும் எத்தனை இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான கிணறுகள் அமையவுள்ளது என நீலகிரி மக்களவைத் தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா நாடாளுமன்றக் கூட்டத்தின்போது கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் 23, குஜராத்தில் 232 என நாடுமுழுவதும் உள்ள 705 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான கிணறுகள் அமைக்கப்பட்டு 31 ஆயிரத்து 996 கோடி ரூபாய் செலவில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளது என்றார்.