India

ஆதிக்க சாதியினரால் 116 தலித்துகள் உயிருக்கு அச்சுறுத்தல் : ஜிக்னேஷ் மேவானி ‘பகீர்’ ட்வீட்!

குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் ஜலீலா கிராம ஊராட்சி துணைத் தலைவரான மஞ்சி சோலங்கி எனும் தலித் ஒருவர் கடந்த வாரம் கொல்லப்பட்டார். இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 116 தலித்துகள் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் மஞ்சி சோலாங்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது காரால் மோதிய ஆதிக்க சாதியினர் அவரை கடுமையான ஆயுதங்களால் தாக்கியதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்புக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், குஜராத் அரசு அதைக் கண்டுகொள்ளாமல் விட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதத்தில் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் மூன்று பேர் இவ்வாறு ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்டுள்ளனர். பலரது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களை வெகுவாக அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், கட்ச் மாவட்டத்தின் தலித் செயற்பாட்டாளர்கள், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதப்படும் 116 பேரின் விவரங்களை வெளியிட்டு பாதுகாப்புக் கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக, "கட்ச் மாவட்டத்தில் 116 தலித்துகள் கொல்லப்படும் அபாயத்தில் உள்ளனர். அவர்கள் உரிமையாளராக உள்ள நிலத்தில் பயிரிட முயற்சித்ததற்காக அவர்களை ஆதிக்க சாதியினர் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்" என ஜிக்னேஷ் மேவானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், குஜராத் மாநில அரசிடமிருந்து போதுமான பாதுகாப்பைக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.