India

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு அவசியம் இல்லை! சீத்தாராம் யெச்சூரி

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போதே பா.ஜ.கவினர் கலவரங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்னர் மம்தா கட்சி தொண்டர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பா.ஜ.க - திரிமுணால் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே கடும் மோதல் போக்கு அதிகரிக்கின்றது.

இந்த வன்முறையால் இதுவரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைக்குழு ஒன்றை அவசரமாக மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க ஆளுநர் அதிருப்தியை தெரிவித்ததாகவும், வன்முறையை கட்டுப்படுத்த மாநில அரசு முயற்சி செய்ய தவறிவிட்டதாக ஆளுனர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்படுமோ என்ற அச்சம் அங்கு உருவாகியுள்ளது.

மேலும் இந்த வன்முறை சம்பவங்கள் அதிகாரப்போட்டிக்காக நடைபெறுகிறது இரண்டு கட்சிகளுமே திட்டமிட்ட வன்முறையில் ஈடுபடுகின்றனர் என கூறி நேற்றைய முன் தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடது ஜனநாயக அணி சார்பில் பேரணி நடைபெற்றது.

மேலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறை படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது, ‘‘நாங்கள் எப்போதுமே ஜனாதிபதி ஆட்சிக்கு எதிரானவர்கள். இதுதான் எங்களது கொள்கை. மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாகத்தான் இருக்கிறது. அதற்காக, ஜனாதிபதி ஆட்சியை நடைமுறை படுத்த வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது’’.

இந்த வன்முறையை பயன்படுத்தி பா.ஜ.க ஆதாயம் தேட முயற்சிக்கிறது. வன்முறையை கட்டுப்படுத்த சுயநலம் பாராமல் மாநில அரசே முயற்சி எடுக்கவேண்டும். என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.