India

பாஜக-விலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறவேண்டும்: நிதிஷ் குமாருக்கு லாலு கட்சி வேண்டுகோள்!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி அமைத்து ஆட்சி செய்துவருகிறது. நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின் இருகட்சிகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.கவின் அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி மட்டும் தருவதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. ஆனால் நிதிஷ்குமார் 2 அமைச்சரவை பதவி கேட்டதாகவும் அதனை கொடுக்கதாததால் கூட்டணியில் சிக்கல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே பீகாரில் தனது அமைச்சரவையை நிதிஷ்குமார் விரிவுபடுத்தினார். ஆனால், அதில் சேர பா.ஜ.க மறுத்துவிட்டதால் அமைச்சர் பதவி வழங்கவில்லை. இதனால் மனக்கசப்பு மேலும் அதிகரித்துவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத்சிங் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-விற்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது. எனவே நிதிஷ் குமார் மற்றும் அவரது கட்சி இனி பா.ஜ.கவிற்கு தேவைப்படாது என அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இனியும் அதே கூட்டணியில் இருப்பதைத் தவிர்த்து, பா.ஜ.க கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேற வேண்டும். மேலும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட மற்ற மாநில கட்சியினர் சேர்ந்து 2020-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடிக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.