India

தமிழகம், கேரளா, ஆந்திராவில் மலராத தாமரை : பா.ஜ.கவிற்கு செக் வைத்த தென் மாநிலங்கள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளிலும் 18 சட்டசபை தொகுதிகளிலும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆளும் அ.தி.மு.க கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக மட்டும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிட இடங்களிலெல்லாம் கடைசி இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதே போல கேரளாவிலும் ஒரு இடத்தில் கூட வெற்றியடையவில்லை. சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பெரிய அளவில் போராட்டம், கலவரம் என வன்முறையில் ஈடுபட்டனர். இதன் மூலம் தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என எண்ணினார்கள். ஆனால் அவர்கள் போட்டுவைத்த திட்டம் வாக்கு எண்ணிக்கையின் போது சுக்குநூறாக உடைந்தது. ஆந்திர பிரதேசத்தில் 25 நாடாளுமன்ற தொகுதியில் ஒரு தொகுதியில் கூட கணிசமான வாக்குகளை கூட பெறாமல் தோல்வியை தழுவியுள்ளது.

மாற்ற மாநிலங்களில் பா.ஜ.க 50 சதவீதற்கும் மேல் வாக்குகளை பெற்றதாக அமித் ஷா சொல்லுகிறார். ஆனால் இந்த மூன்று மாநிலங்களில் நிலைமை வேறாக வந்துள்ளது. இதனிடையே இன்று காலை தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தை கூட பிடிக்காத நிலையை நெட்டிசன்கள் சமூகவலைத்தகளில் #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக் மூலம் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

வட மாநிலங்களில் மிக அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க.,வால் தென் மாநிலங்களில் கர்நாடகா தவிர்த்து வேறு எங்கும் செல்வாக்குப் பெற முடியாதது அக்கட்சித் தலைவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.