India
ஃபேஸ்புக்கில் வந்த அவசர கோரிக்கை - உடனடியாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய கேரள அமைச்சர்
கேரள மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனின் அமைச்சரவையில் உள்ள 2 பெண் அமைச்சர்களில் ஒருவர் சைலஜா. இவர் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார்.
கன்னூர் பகுதியைச் சேர்ந்த இவர், அமைச்சராகவதற்கு முன்பு, உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்ததால் சைலஜா டீச்சர் என்றால் அம்மாநிலத்தில் பிரபலம்.
அமைச்சர் சைலஜா, நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை ஆராய்ந்து, அதனை உடனுக்குடன் சீர் செய்வதையும், மக்களுக்கு தேவையான சுகாதார உதவிகளையும் செவ்வனே செய்து வருகிறார்.
அதேபோல், சமூக வலைதளமான முகநூலிலும் அமைச்சர் சைலஜா எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். தனது பக்கத்தில் பதிவிடும் கமெண்ட்களில் முக்கியமானவற்றுக்கு தவறாமல் பதிலளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவ்வகையில், நேற்று இரவு தனது முகநூலில், சிகிச்சை காரணமாக 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர் குறித்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ஜியாஸ் என்பவர் கமெண்ட் செய்திருந்தார்.
அதில், இன்று காலை என்னுடைய சகோதரிக்கு பிறந்த குழந்தைக்கு இதயத்தில் குறைபாடு இருந்துள்ளது. ஆகவே எடுகரா, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் விசாரித்ததற்கு சிகிச்சைக்கான வசதிகள் இல்லை என கூறிவிட்டனர். ஆனால், குழந்தைக்கு தக்க சமயத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால் தயவு செய்து உதவுங்கள் டீச்சர் என பதிவிட்டிருந்தார்.
இந்த கமெண்டிற்கு அடுத்த 2 மணிநேரத்தில் பதில் அளித்துள்ளார் சைலஜா டீச்சர். அதில் அவர் குறிப்பிட்டிருந்தது பின்வருமாறு,
உங்களுடைய பதிவை முன்பே பார்த்துவிட்டோம் . சுகாதாரத் துறைக்கும், இதய சிகிச்சை அளிக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு குழந்தையின் குறைபாடு குறித்து தகவல் அனுப்பப்பட்டுவிட்டது. கொச்சியில் உள்ள இதய திட்டம் செயல்படும் லிசி மருத்துவமனையில் குழந்தைக்கு திட்டத்தின் அடிப்படையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும், விரைவில் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், கொச்சினுக்கு செல்வதற்காக குழந்தை இருக்குமிடத்திற்கே ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.
அவசர உதவி கேட்ட சில மணிநேரத்திலேயே விரைந்து நடவடிக்கை எடுத்த ஷைலஜா டீச்சரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Also Read
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!