India

ஃபானி புயல் உருக்குலைத்த ஒடிசாவில் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

ஃபானி புயலால் சீர்குலைந்த ஒடிசா மாநிலத்தில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று முதல் ஒடிசாவில் ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.

ஃபானி புயல் கடந்த மே 3-ம் தேதி, ஒடிசா மாநிலம் கோபால்பூர் - சந்த்பாலி இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 175 கி.மீ வேகத்தில் வேகத்தில் வீசிய சூறைக் காற்றால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. புயலால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தால் சாலைகள், தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்தன. போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம், ரயில் சேவை ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

புயல் கரையைக் கடந்த பின், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், சீரமைப்புப் பணிகளை முழுவீச்சில் துவக்கினர். சாலைகளில் கிடந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராகத் துவங்கியுள்ளது. இதனால் நிலைமை வேகமாக சீரடைந்து வருகிறது.

விமானப் போக்குவரத்து நேற்று முன்தினமே சீரடைந்த நிலையில், ரயில் போக்குவரத்து ஓரளவுக்கு சீராகத் துவங்கியுள்ளது. ரத்து செய்யப்பட்ட 138 ரயில்களில் 85 ரயில்கள் இயங்கி வருவதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.