India

புல்வாமா போன்று மீண்டும் தீவிரவாத தாக்குதல்? - உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் இந்த ஆண்டு பிப்.,14 அன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 40 வீரர்கள் பலியாகினர்.

இந்நிலையில், புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று மீண்டும் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற இருப்பதாகவும் இதனை ஐ.எஸ். மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்புகள் செயல்படுத்த இருப்பதாகவும் மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக இந்தியாவில், தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.