India

“மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமையவேண்டும்” - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாக இருக்கின்றன. இந்தத் தேர்தலில் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் மாநிலக் கட்சிகளும், பா.ஜ.க - காங்கிரஸ் அல்லாத தேசியக் கட்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் தங்கள் வாக்குறுதிகளை விளக்கி வருகின்றன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கிறது. அங்கு ஒரே கட்டமாக மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க ஆட்சியை நீக்குவதே நமது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது, “பா.ஜ.க-வை தோற்கடித்து மோடியையும், அமித்ஷாவையும் அதிகாரத்திலிருந்து அகற்றுவதே நமது நோக்கம். பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. நாம் அனைவரும் இந்தியர்கள்; பின்னர் தான் இந்துக்களோ, முஸ்லீம்களோ.

இந்த மக்களவைத் தேர்தல் நாட்டையும், அரசியலைப்பையும் பாதுகாப்பதற்கான தேர்தல். தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என்பதே நம் விருப்பம்.” எனப் பேசியுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.