India

மேனகா காந்தி,ஆசம் கான் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை ! 

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில் ,மீதமுள்ள ஆறு கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்த பிரச்சாரத்தின் போது தனி நபர் மீதான விமர்சனங்கள் மற்றும் தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்டவை தேர்தல் விதி மீறலாகும். எனவே இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்ளும் தலைவர்களை இந்திய தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.

சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் அவருக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்து இருக்கிறது.

ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம் கான் தன்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், அவரது உள்ளாடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோருக்கு பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.