DMK Government

“தி.மு.கவின் கோட்டையாக மாறியது கரூர்.. கலைஞரின் பொற்கால ஆட்சியை வழங்குவோம்” : செந்தில் பாலாஜி நெகிழ்ச்சி!

கரூர் மாவட்டத்தில் தி.மு.க சார்பில் 4 தொகுதிகளில் வேட்பாளர்களும், அ.தி.மு.க சார்பில் மூன்று தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அதன் அடிப்படையில் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதியில் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சிவகாமசுந்தரி, குளித்தலை தொகுதியில் மாணிக்கம் ஆகியோர் தி.மு.க சார்பில் போட்டியிட்டனர். வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தளவாபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தி.மு.க வேட்பாளர்கள் அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, குளித்தலை மாணிக்கம் ஆகிய மூன்று வேட்பாளர்களும் தொடர்ந்து முன்னணியில் இருந்தனர்.

கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதி நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதியிலும் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமிரிந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

சான்றிதழ்களை பெற்ற பிறகு தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்கள் மகத்தான வெற்றியை தி.மு.கவிற்கு வழங்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதியிலும் தி.மு.கவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் அளித்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முத்தமிழறிஞர் கலைஞரின் பொற்கால ஆட்சியை தமிழகத்துக்கு வழங்குவோம்” என தெரிவித்தார்.

Also Read: “தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி - தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகிறார்”: வெற்றி வேட்பாளர்களின் விபரங்கள்!