DMK Government

எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 4 மடங்கு அதிக வாக்குகள் பெற்று வென்ற உதயநிதி... முதல் தேர்தலிலேயே அசத்தல்!

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகின்றனர்.

163 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளரை விட சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் 23,643 வாக்குகள் பெற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின் 91,776 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தி.மு.கவினர் கொண்டாடி வருகின்றனர்.

Also Read: பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்... தொடர்ந்து முன்னிலையில் தி.மு.க கூட்டணி!