DMK Government

“தேர்தல் முறைகேடுகள் குறித்து முழு விசாரணை நடத்தவேண்டும்” - தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க கோரிக்கை!

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அ.தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்த தி.மு.க வழக்கறிஞர் நீலகண்டன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "பொதுத்தேர்தலை அமைதியாக நடத்த தி.மு.க முழு ஒத்துழைப்பு கொடுத்தது. அதே நேரத்தில் பல இடங்களில் அ.தி.மு.கவினர் தேர்தல் விதிகளை மீறியுள்ளனர்.

அமைச்சர் பெஞ்சமின் தி.மு.கவினரை கொச்சையாக பேசி அச்சுறுத்தியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார். அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் குறித்தும், இது போன்று தமிழகத்தில் நடந்த தேர்தல் முறைகேடுகள் குறித்தும் முழு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரினோம்.

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சி.சி.டி.வி கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளைக் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி சத்யசாகு, ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இருக்காது என உறுதியளித்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்படும் வரை நமக்கான பொறுப்பும்; கடமையும் நிறைய இருக்கிறது” - மு.க.ஸ்டாலின்