DMK Government

VVPAT இயந்திரத்தை எடுத்துச்செல்ல முயன்ற நபர்... சிறைபிடித்த பொதுமக்கள்... வேளச்சேரியில் பரபரப்பு!

சென்னை வேளச்சேரி டான்சி நகரில் வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்திலிருந்து ஒருவர் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் எடுத்துச் செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவுபெற்றது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் அப்பகுதிகளில் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மாற்று இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

சில வாக்குச்சாவடிகளில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் பா.ஜ.க-விற்கு வாக்கு பதிவாகுவதாக குற்றம்சாட்டப்பட்டது. சில இடங்களில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், வேளச்சேரியில் முறையாக அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாகனத்தில் எடுத்துச் செல்லாமல் தனிநபர் ஒருவர் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் எடுத்துச்சென்றதை பார்த்த பொதுமக்கள் அந்த நபரை சிறைபிடித்து வைத்துள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் வாக்குப்பெட்டியை எடுத்து சென்ற நபரை போலிஸ் வாகனத்தில் ஏற்றினார். போலிஸ் வாகனத்தில் இருந்த நபரை அங்கிருந்த மக்கள் தாக்க முயன்றனர்.

வேளச்சேரி பகுதியில் வாக்குப்பெட்டியை எடுத்துச் சென்றவர் யார் என்ற முதற்கட்ட விசாரணையில் அவர் மாநகராட்சி ஊழியர் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை திருட முயன்ற சம்பவத்தால் வேளச்சேரியில் பதற்றம் நிலவுகிறது. வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க-வினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் புகார் எழுந்த நிலையில், மறுவாக்குப்பதிவு செய்யக்கோரி வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

Also Read: தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு.. 7 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் அதிகபட்ச வாக்குப்பதிவு! #Election