DMK Government

அதிகாரிகள் துணையோடு அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா கனஜோர்... சுற்றிவளைத்துப் பிடித்தும் நடவடிக்கை இல்லை!?

சென்னை அசோக் நகர் பகுதியில் தேர்தல் பணப்பட்டுவாடாவில் ஈடுபட முயன்ற அ.தி.மு.கவினருக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை தி.மு.கவினர் சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகர் 7வது அவென்யூ பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தெருவோர உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி மற்றும் சான்றளித்தல் என்ற பெயரிலான முகாமிற்கு சில அரசு அதிகாரிகள் வந்துள்ளனர்.

அவர்களுடன் இணைந்த அ.தி.மு.கவினர், அப்பகுதி பொதுமக்களை வரவழைத்து, வாக்குக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிட்ட தொகையை கவரில் போட்டு பணப்பட்டுவாடா செய்துள்ளனர்.

இதையறிந்து அந்த விடுதிக்கு தி.மு.கவினர் சென்ற நிலையில், அ.தி.மு.கவினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்த அரசு அதிகாரிகளை சுற்றிவளைத்து பிடித்த தி.மு.கவினர், அவர்களிடம் பணப்பட்டுவாடா குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு அதிகாரிகள் மழுப்பலாக பதிலளித்த நிலையில், அசோக் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், அந்த அதிகாரிகளை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.கவினர் வலியுறுத்திய நிலையில், காவல்துறையினர் அலட்சியமாக பேசியுள்ளனர்.

இதையடுத்து, தியாகராய நகர் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் ஜெ.கருணாநிதி, வழக்கறிஞர்களுடன் வந்து காவல்துறை அதிகாரிகளை சந்தித்தார். இந்த பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க பலமுறை தொடர்புகொண்டும், தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜேந்திரனிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை என குற்றம்சாட்டினார்.

Also Read: “முழு சங்கி மாஃபா பாண்டியராஜன்” - அமைச்சரை தோற்கடிக்க உறுதிபூண்ட ஆவடி மக்கள்!