DMK Government

ராஜஸ்தான் எண் பதிந்த லாரியில் எடப்பாடி, ஜெ படம் பொறித்த பள்ளி பைகள்.. தொடர் விதிமீறலில் அ.தி.மு.கவினர்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள், வேட்பாளர் நேர்காணல்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்புகள் என பரபரப்பாக அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் ஆளுங்கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை விலைக்கு வாங்கும் வகையில் பரிசு பொருட்கள், இலவசமாக ஆடுகள், கோழிகள் மற்றும் இரவு நேரங்களில் வீடு வீடாகச் சென்று பணம் கொடுப்பது என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை கச்சிதமாக கண்டறிந்து எதிர்க்கட்சிகளான தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு அதிமுகவினரின் பட்டுவாடாவை தொடர்ந்து தடுத்து வருகின்றனர். அவ்வகையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட பைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

நீதிமன்ற சாலை பகுதியில் நீண்ட நேரமாக ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று நின்றதால் சந்தேகமடைந்த மாவட்ட தி.மு.கவினர் தேர்தல் பறக்கும் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து விரைந்த தேர்தல் பறக்கும் படையினர் லாரியை சோதனையிட்டதில் அதில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக பழனிசாமி மற்றும் ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்ட சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4,500 பைகள் இருந்துள்ளன.

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது எப்படி மாவட்ட எல்லைகளை கடந்த லாரி ஊருக்கும் வந்திருக்கும் என திமுகவினர் கேள்வி எழுப்பியதோடு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து லாரி மற்றும் பைகளை போலிஸார் கைப்பற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.