Election 2024
“டெல்லி மக்கள் என்ன பாகிஸ்தானியர்களா?” - அமித்ஷாவின் ஆணவ பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதுவரை நடைபெற்ற வாக்குபதிவில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று டெல்லியின் சங்கம் விகார் பகுதியில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார். அதோடு ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்களை பாகிஸ்தானியர்கள் என்றும் கடும் வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் நேற்று பேசிய அமித் ஷா, ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்களை பாகிஸ்தானியர் என விமர்சித்தார். டெல்லி மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். அவர்கள் பாகிஸ்தானியரா? பஞ்சாபிலும் ஆட்சியமைத்திருக்கிறோம். பஞ்சாப் மக்கள் பாகிஸ்தானியரா? இன்னும் நாட்டில் பல பகுதிகளில் எங்களை ஆதரிக்கும் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் பாகிஸ்தானியரா?
மோடிக்கு அடுத்தபடியாக பிரதமராகும் ஆணவத்தில் மக்களை இப்படி அச்சுறுத்துகிறீர்களா? உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் பிரதமராக முடியாது. ஏனெனில் ஜூன் 4ம் தேதி பாஜக அரசாங்கத்தை மக்கள் உருவாக்கப் போவதில்லை.” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமித்ஷா மக்களை அச்சுறுத்துவதாக பிரிடிஷ் ஊடகமான 'The Gaurdian' செய்தி வெளியிட்டிருந்தது.
இப்படியான சூழலில் எதிர்க்கட்சியினரை பாகிஸ்தானியர்கள் என்றும் கடும் சொற்களால் விமர்சித்த அமித்ஷாவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. பாஜகவுக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லையெனில், அவர்களுக்கான ஆயுதம் 'இஸ்லாமியர்கள், பாகிஸ்தானியர்கள்' என்பதுதான். தொடர்ந்து வெறுப்பு பேச்சை மட்டுமே பேசி பாஜக பிரசாரம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!