DMK

தி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள்.. உள்ளாட்சி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பெருகும் ஆதரவு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்று வரும் நிலையில், அ.தி.மு.கவை சேர்ந்த தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தி.மு.கவில் இணைந்தனர்.

அ.தி.மு.க தஞ்சை மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவருமான தம்பி தேவ ரத்தினம் தலைமையில் இன்று அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் பலர் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தம்பி தேவ ரத்தினம் பேசுகையில், “தஞ்சை மாவட்ட அ.தி.மு.கவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தி.மு.கவில் இணைவதாக இருந்தது. கொரோனா காலகட்டம் என்பதால் அவர்களின் சார்பாக 9 முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.கவிலிருந்து விலகி இன்று தி.மு.கவில் இணைந்தனர்.

ஒரு உரையில் எப்படி இரண்டு வாள் இருக்க முடியாதோ அதேபோன்று கழகத்திற்கு இரண்டு தலைமை இருக்கக்கூடாது. இதுவே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றுதான் இன்றைய உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். இதை மக்கள் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் 95% இடங்களில் தி.மு.க மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

அ.தி.மு.க ஒன்றிய அரசுக்கு நரேந்திர மோடிக்கு கட்டுப்பட்டு இயங்கி வந்தது தெளிவாகத் தெரிகிறது. இது எங்களுடைய கௌரவத்தையும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தையும் அழிப்பதாக உள்ளது.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்குக்கு துணைபோகாத அரசாக தி.மு.க இருக்கிறது. திராவிட பண்பாடு, தமிழர் பண்பாடு, மக்கள் நல்வாழ்வு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அவரின் புதல்வர், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். ஆகவே அ.தி.மு.கவிலிருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் எங்களை இணைத்துக் கொண்டோம்” எனத் தெரிவித்தார்.

Also Read: 9 மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றிய தி.மு.க... சொல்லி அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!