DMK

'அத்தனை சாதனைகளுக்கும் அவரே முன்னோடி' - திராவிடத் தலைமகன் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன?

தென்னாட்டின் அரசியல் வரலாற்றில் திராவிட அரசியலை நிலைநிறுத்தியவர். சமதர்ம சமுதாயம் நிலவ, எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், தமிழினம் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்று உழைத்தவர் பேரறிஞர் அண்ணா.

1967 ஆம் ஆண்டு தமிழகத்தின் அரசியலில் வெள்ளி முளைத்தது. பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சரானார். பேரறிஞர் முதல்-அமைச்சராக பணியாற்றிய காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த சாதனைகள் திராவிட ஆட்சியின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்தின.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் பேரறிஞர் அண்ணா செய்த அற்புதமான சாதனைகளில் சில..

1. 1967-ல் பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.

2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் என அரசாணையை கொண்டுவந்தார்.

3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.

4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமார எனச் சொல்லி பதவி ஏற்றார்.

5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.

7. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.

8. பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

9. ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.

10. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.

11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.

12. சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.

13. 1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.

14. சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.

15. 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினார்.

16. கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.

(திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஜி.யு.போப், பாரதியார், பாரதிதாசன், ஔவையார், கண்ணகி, கால்டுவேல், உ.வே.சா.)

17. பள்ளிகளில் தேசிய மாணவர் படையில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

18. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளர் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

19. முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றறிக்கை அனுப்பினார்.

20. சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.

21. விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.

இவைகள் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியின் சாதனைகளில் ஒருசில. பேரறிஞர் அண்ணாவே கழக ஆட்சியின் அனைத்து சாதனைகளுக்கும் முன்னோடி. அவரே நம் திராவிடத் தலைமகன்.