DMK

“ஜனவரி 20 வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட கால அவகாசம் நீட்டிப்பு” - தி.மு.க அறிவிப்பு!

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க சார்பில் கடந்த டிசம்பர் 23 முதல் மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கூட்டங்களில், 'அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று வருகிறார். தி.மு.க நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 10-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் நடத்த வரும் 20ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தி.மு.க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு :

“2020 டிசம்பர் 23 முதல் 2021 ஜனவரி 10 வரை தமிழகம் முழுவதும் 16,500 'மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள்' நடத்திட வேண்டுமென, மாவட்ட, மாநகர தி.மு.க செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில், எடுத்த முடிவின்படி தமிழகம் முழுவதும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.

மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள், சில மாவட்டங்களில் பெருமழையின் காரணமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டுமென்றும் மாவட்டச் செயலாளர்கள் வைத்த கோரிக்கையினையேற்று, 2021 ஜனவரி 20ஆம் தேதி வரை 'மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள்' நடத்திட கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.”

இவ்வாறு தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “ஊழல் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க நான் ரெடி; மிஸ்டர் பழனிச்சாமி நீங்கள் ரெடியா?” : மு.க.ஸ்டாலின் சவால்!