DMK
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ - 11 நாட்களில் 59,140 மக்களைச் சந்தித்த தி.மு.கழக முன்னணியினர்!
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து வரும் தி.மு.கழக முன்னணியினர் 11 நாட்களில், 232 பொதுக்கூட்டங்கள் நடத்தி 2099 கி.மீ., பயணம் செய்து 59,140 மக்களுடன் நேரடி சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செய்தியைத் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரச்சாரப் பயணத்தை, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னையில் அறிவித்தார்.
இதன்படி, கழகத்தைச் சேர்ந்த 15 தி.மு.கழக முன்னணியினர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் தூதுவர்களாக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 75 நாட்கள், 15 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து 1,500-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடுவார்கள்.
தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தனது பரப்புரைப் பயணத்தைத் தொடங்கினார்.
அடுத்ததாக, கழக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியில் தனது பரப்புரையைத் தொடங்கி ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறார்.
அதேபோல், கழக கொள்கைப்பரப்புச் செயலாளர்கள் சபாபதி மோகன் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் தங்களது பரப்புரையைத் தொடங்கினர். ரு. சபாபதி மோகன் முதல் நாளில் 74 கி.மீ பயணித்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்ததோடு, பொதுமக்களுடன் சமபந்தி விருந்திலும் பங்கேற்றார். திண்டுக்கல் ஐ.லியோனி 90 கி.மீ., பயணித்து ஆயிரக்கணக்கான மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசி வருகிறார்.
கழக துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியிலும், அந்தியூர் செல்வராஜ் அவிநாசி சட்டமன்றத் தொகுதியிலும் தங்களது பரப்புரையைத் தொடங்கினர். ஐ.பெரியசாமி 35 கி.மீ., பயணம் மேற்கொண்டு விவசாயிகளையும் மக்களையும் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அந்தியூர் செல்வராஜ் 75 கி.மீ., பயணித்து, அருந்ததியர் சமூக மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர், சேவூர் பகுதியில் உள்ள மக்களிடம் அவர் பேசியபோது, அப்பகுதியில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவிற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தலை எதிர்க்கும் தங்களது கோரிக்கையை அவரிடம் எடுத்து வைத்தனர்.
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்றைய முன்தினம் சைதாப்பேட்டைப் பகுதியில் தனது பரப்புரையைத் தொடங்கி, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதிவாசிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
இதுவரை கடந்த 11 நாட்களில், ஏழு கழக முன்னணியினர் 2,099 கி.மீ., பயணம் மேற்கொண்டு, 15 கழக மாவட்டங்களிலுள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளில் 232 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 59,140 மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளனர்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!