DMK
ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !
ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பாதிப்பால் நேற்று மாஸ்கோவில் காலமானார். அவருக்கு வயது 79. அவரின் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் - ஆய்வாளர் - பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
பொன்னியும் - வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர் துப்யான்ஸ்கி.
சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்து போன நிலையில், பேராசிரியர் துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது போற்றுதலுக்குரியதாகும்.
அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் ஆய்வுப் பணியை மேற்கொண்டு, புதிய பார்வையுடன் பல கட்டுரைகளை வழங்கிய பேராசிரியர் துப்யான்ஸ்கி வாயிலாகத் தமிழ் மொழியை அறிந்துகொண்ட மேல்நாட்டவர் ஏராளம். 2010-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியில் கோவையில் நடைபெற்ற செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்று, தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து, தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்றவர்.
பேராசிரியர் துப்யான்ஸ்கியின் இறப்பு தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மேற்கொண்ட பணிகளைத் தொடர்ந்திடச் செய்வதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!