DMK

"நான் சொன்னபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது” - துரைமுருகன் பேட்டி!

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சமுதாயத்தில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும், தாய்மொழி தமிழைக் காப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்பதிலும், அரசியலில் புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதிலும் கலைஞர் தனது எண்ணங்களை இறுதிவரை நிலைநாட்டினார்” எனக் குறிப்பிட்டார்.

அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பது பா.ஜ.கவுக்கு சாதகமாக அமையுமா எனும் கேள்விக்கு பதிலளிக்கும்போது, “ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினால் மட்டும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியுமா? அடுத்த தேர்தலின்போது அப்போதைய சூழல்தான் வெற்றியைத் தீர்மானிக்கும்.” எனத் தெரிவித்தார்.

தி.மு.க-விலிருந்து கு.க.செல்வம் எம்.எல்.ஏ தற்காலிக நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், “எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோது தி.மு.க சிறிய இடர்பாடுகளைச் சந்தித்தது.

வி.பி. துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்கள் செல்வதால் தி.மு.க-வுக்கு எந்த இடர்பாடும் இல்லை. இவர்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதுபற்றிச் சொல்ல ஒன்றுமில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தில் ஆரம்பகட்டத்திலேயே கொரோனாவின் குரல்வளையை நெரித்திருக்கலாம். நான் சட்டமன்றத்தில் பேசியபோதே தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.” என அரசைச் சாடினார்.

Also Read: “உண்மைகளை மறைக்காமல் மாவட்ட வாரியாக கொரோனா புள்ளி விவரங்களை வெளியிடுக” - தி.மு.க எம்.எல்.ஏ பொதுநல மனு!