DMK

“தீரன் சின்னமலையின் கனவை நனவாக்க தி.மு.க என்றைக்கும் பாடுபடும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் தீரன் சின்னமலையின் 212 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை - கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் - அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டுப்பற்றுக்கும் - வீரத்திற்கும் இன்றைக்கும் தமிழக இளைஞர்களுக்கு அடையாளமாக விளங்கும் தீரன் சின்னமலை நாட்டிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது; பெருமைக்குரியது.

ஏழைகளுக்காக வரிப்பணத்தை வழிமறித்துக் கைப்பற்றிய போது, “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்” என்று துணிச்சலாகச் சொன்னவர்!

இளைஞர்களின் கனவு நாயகராகத் திகழும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்குப் பெருமை சேர்த்திட, சென்னை கிண்டியில் சிலை அமைத்தது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த கழக ஆட்சிதான்! நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டதும் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

கொங்கு மண்டல இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு கொங்கு வேளாளர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே!

"மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்" என்ற தீரன் சின்னமலை அவர்களின் கனவை நனவாக்க திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதியை அவருடைய இந்த நினைவு நாளில் சபதமாக எடுத்துக் கொள்கிறேன். வாழ்க அவரது புகழ்!” எனத் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு காலத்தில் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் புலவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்றி மரியாதை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் , ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ. அன்பரசன், சைதை பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைராஜ் என மொத்தம் 5 பேர் மட்டுமே இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய துணிந்துவிட்டதா அ.தி.மு.க அரசு?”- மு.க.ஸ்டாலின் விளாசல்!