DMK

"மக்கள் தயாராகிவிட்டார்கள்; அடுத்த ஆண்டு தமிழக முதல்வராக இருப்பார் நம் தலைவர்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி கே.என் ஜி.புதூர் பகுதியில் இன்று நடைபெற்றது. தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், உறுப்பினர் அட்டையை இளைஞரணியினருக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நேற்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். அந்தப் பயணத்தை முடித்து திரும்ப வரும்போது கொஞ்சம் நெடிய பயணமாக இருந்ததால் கொஞ்சம் சுமையாகத்தான் இருந்தது. ஆனால் உங்களையெல்லாம் பார்த்தவுடன் தெம்பு வந்ததுள்ளது.

நம் கழகத்தில் மாணவரணி, மீனவரணி, வழக்கறிஞரணி என்று எத்தனையோ அணிகள் இருந்தாலும் நம்முடைய தலைவரின் மனதிற்கு நெருக்கமானது இளைஞரணிதான். அவர் வகித்த பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற்றிருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் 90% இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். இந்த அராஜக அரசு கொடுத்த இடையூறுகளை தாண்டி 60 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம்.

தமிழக மக்கள் இப்போதே தயாராகிவிட்டார்கள். இன்னும் 12 மாதங்கள் தான் இருக்கின்றன. இன்று எதிர்க்கட்சித் தலைவராக உள்ள நமது தலைவரை அடுத்த ஆண்டு இதே தேதியில் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்போம்” எனப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சிஆர்.இராமசந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முன்னதாக, கோவை மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி தி.மு.க பகுதி கழக அலுவலகத்தை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Also Read: “தவழ்ந்த அடிமையும், தர்மயுத்தம் செய்த அடிமையும்” - பங்கமாக கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!